Share via:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.
அப்படி மேல்முறையீடு செய்தும் தங்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை என்று குற்றம்சாட்டி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பெண்கள் நேற்று (அக்.6) சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற வட்டாட்சியர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானமாக பேசி கலைந்து போகச் செய்தார்.
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஆலங்காடு பகுதியிலும் பெண்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டு தங்களுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வேண்டும் என்று சாலையில் அமர்ந்து போராடத் தொடங்கினர். அங்கு சென்ற அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி பெண்களை கலைந்து போகச் செய்தனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் கூட்டாக சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது தற்போது தி.மு.க. அரசுக்கு பெரிய தலைவலியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.